Thursday, April 5, 2012

முகப்புத்தகம்



உன் முகம் காட்டும்
புத்தகமாக தான் என்
முகப்புத்தகம்
வாழ்ந்துகொண்டிருக்கிறது.

அவளும் அவளும்



அழுகிறேன்.
என் ஒருத்தனுக்கு மட்டுமே
கேட்கும் வண்ணம்.
எதற்காக என்று தெரியவில்லை.

உள்ளே நீ.
ஒரு உடலில்
மூன்று உயிர் சுமக்கிறாய்.
என் உயிரையும் சேர்த்து.

ரணவேதனை உணர்கிறேன்.
உயிர் வலிக்கிறது.
உன் அழுகை கேட்கும் நொடியெல்லாம்.

ஓடி வந்து கை பிடித்து
ஆறுதல் கூற ஆசை. இருந்தும்
தீவிர சிகிச்சைப் பிரிவு
என எழுதப்பட்ட கண்ணாடி கதவு
என்னை கையாலாகாத
காதலனாய் பணித்துவிட்டது.

உயிர் நொடி அது.
நானும் நீயும் செத்துப் பிழைத்த நொடி.
உன் உயிர் உச்சத்தில் கதற
ஒரு கனம்
என் உயிர் நின்று துடித்தது.

அமைதி.
அமைதிக்குப் பின்
உள்ளிருந்து எட்டிப்பார்த்த
இரு அழுகை.

உன் குரலும்
கொஞ்சம் ஸ்ருதி குறைந்த
துணைக் குரலுமாய்
இன்னொன்றும்.

சற்று நேரத்தில் “உங்களுக்கு பெண் குழந்தை”
என இரத்தம் பூசி மொழுகிய
பிண்டமாய் கொடுக்கப்பட்டால் அவள்.

என் உள்ளங்கையில் அடங்கிப்போனால் நம் தேவதை.
அள்ளி அணைத்தேன்.அழுதேன்.
முத்தமிட்டு முகர்ந்தேன்.
முழுவதுமாய் அவளை.
இரத்தத்தின் கவுச்சி வாடையுடன்,
மெலிதாய் உன் வாசமும் அவள் மேல்.

நீ இவளை தூக்கிக்கொள்.
நான் உன்னை தூக்கிக்கொள்கிறேன்.
வா. நம் வீட்டுக்குப் போகலாம்.
இப்போது உன்னோடு சேர்த்து எனக்கு
இரண்டு குழந்தைகள்.

Wednesday, April 4, 2012

ஓவியம்



ஓவியம் பேசுகிறது..
வரைந்தவன்-பிரம்மன்.
மொழி- மெளனம்.

Wednesday, December 14, 2011

இங்கு நேரம் செலவிடாதீர்கள்

இது எனக்கும் அவனுக்குமான உரையாடல்;
யார் என்று பிறகு சொல்கிறேன்
விடயம் என்னவென்று இங்ஙனம் கேளுங்கள்.

கையுடைந்து, காலுடைந்து
ஒரு பக்கம் முகம் கிழிந்து
ரத்தம் சொட்ட சொட்ட இறந்து கொண்டிருந்த
அவளை தூக்கிச்சென்று கொண்டிருந்தான்.

மனதில் இருந்த தெம்பு உடலில் இல்லை போலும்
களைப்பாற நிழல் தேடி ஒதுங்கினான்.

யார் நீ? எங்கு செல்கிறாய் ? என்றேன்.
பதிலேதும் உரைத்தது போல தோன்றவில்லை எனக்கு.
களைப்பாக இருக்கிறாயே ஏதாவது வேண்டுமா? என்றேன்,
மௌனம வேண்டாம் என்றது.

சற்று நேரம் ஆசுவாசப் படுத்திக்கொண்டு
உடலில் இருந்த சக்தி எல்லாம் ஒன்று திரட்டி பேசத் துவங்கினான்.
எந்த ஜென்மத்தில் நாங்கள் செய்த புண்ணியமோ
இந்த ஜென்மத்தில் இப்படி ஒரு பிறப்பெங்களுக்கு.
பெத்தவங்க இருக்காங்க.
ஆனா ஊரார் தான் ஊட்டி வளத்தாங்க.
கடவுள் எங்களுக்குன்னு ஒன்னும் கொடுக்கலனாலும்
இருக்கறத வச்சி வளமா வாழ்ந்தோம்.
ஒத்துமையும் சிக்கனமும் எங்க கிட்ட கைகட்டி பிச்ச வாங்கணும்.

இவள நா உசுருக்குசுரா நேசிக்கறேன்.
பாவிமாக சோறு எடுக்கப் போகையில வண்டில அடிபட்டுட்டா.
நாதியத்துக் கிடந்தா.
இனி ஏதும் ஆகாது.பொழச்சுக்குவா.
அதான் நா வந்துட்டேன்லனு சொல்லிட்டு
வாஞ்சையோடு தடவிக்கொடுத்தான்.

எத்துனை அன்னியோன்யம் அவர்களுக்குள்.
வலியால் துடித்துக்கொண்டிருந்த அவள்
எதோ முணுமுணுக்க “நாங்க கிளம்பறோம்”னு சொல்லிட்டு
அவள மொத்தமா தூக்கிக்கிட்டு வீடு நோக்கி நடந்தான்
எங்க வீட்டு கட்டெறும்பு தேவன்.

காதல் பொதுவுடைமையானது.
அது மனிதர்களுக்காக படைக்கப்பட்டது அல்ல.
காதலுக்காக படைக்கப்பட்டதுள் மனிதனும் ஒருவன்.